Friday, January 28, 2011

ஒரு நபர் கமிஷன் அமைத்திருப்பது தேவையற்ற செயல்






ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சியை அகற்ற அனைத்து முயற்சிகளையும் புதிய தமிழகம் செய்து வருகிறது. பிப்ரவரி 7ஆம் தேதி முதல், கிராமம் தோறும் பிரசாரம் செய்ய உள்ளேன். தி.மு.க.,வினர் கடந்த தேர்தலில் வாக்குறுதி கொடுத்த இரண்டு ஏக்கர் விவசாய நிலம், மூன்று சென்ட் இலவச வீட்டுமனை போன்ற திட்டங்கள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

ஆனால் தற்போதும் புதிது புதிதாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என கனவு காண்கின்றனர். ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகின்றன. எதிர்கட்சிகள் லோக்சபா கூட்டுக்குழு விசாரணை கேட்டும் மத்திய அரசு அதை மறுத்து வருகிறது. இதனால் வரும் ஊழலுக்கு துணை புரியும் காங்.,கட்சியும் தேர்தலில் தோல்வியை சந்திக்கும். தி.மு.க, அரசு செய்யும் தவறுகளுக்கு மத்திய அரசு பாதுகாவலனாக இருந்து வருகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து அக்கட்சி பொது செயலாளர் ஜெயலலிதா தான் முடிவு செய்வார்.
தமிழகமெங்கும் தி.மு.க.,வுக்கு எதிராக மக்கள் திரண்டு வருகின்றனர். தேவேந்திர குல வேளாளர்களை ஒருங்கிணைக்க ஒரு நபர் கமிஷன் அமைத்திருப்பது தேவையற்ற செயல். ஆட்சிக்கு வந்து, ஐந்தாண்டுகளாகியும் விலைவாசி உயர்வு உட்பட மக்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணாமல், மாநில அரசு, வீணடித்துவிட்டது. ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்தியும் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. விவசாயிகளை காப்பாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாறி வருகிறது, என்றார்.

No comments: